Archives: டிசம்பர் 2022

வலிமையாக நிரைவேற்றுதல்

இந்தியாவின் முதுமையான தடகள வீராங்கனையாக மன் கவுர் என்ற பெண் தனது 103 ஆம் வயதில், போலந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள பட்டய போட்டியில் பங்கேற்றார். வியப்பூட்டும்விதமாக ஈட்டி எறிதல், குண்டெறிதல், 60 மீட்டர் விரைவோட்டம், 200 மீட்டர் ஓட்டம் என நான்கு பிரிவுகளில், கவுர் தங்கம் வென்றார். அதிலும் ஆச்சரியமானது, தான் 2017 ஆம் ஆண்டில் ஓடினதைக் காட்டிலும் விரைவாக ஓடியிருந்தார். கவுர் ஒரு கொள்ளுப்பாட்டியாகத் தனது இரண்டாம் நூற்றாண்டில் ஓடியது, எவ்வாறு சிறப்பாக முடிக்க வேண்டுமென்பதைக் காட்டியது.

அப்போஸ்தலன் பவுலும், இளைய சீடனாகிய தீமோத்தேயுவுக்கு, தன்னுடைய வாழ்வின் இறுதி நாட்களுக்குள் வந்திருப்பதை எழுதினார். "நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது." (2 தீமோத்தேயு 4:6) என்று எழுதினார். பவுல், "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்" (வ.7) என்றார். தமது வியத்தகு சாதனைகளைக் கருத்தில்கொண்டோ, தான் ஏற்படுத்திய அகன்ற தாக்கத்தை எண்ணியோ (அவை ஆச்சரியமானவைதான்) அவருக்கு இத்தகைய நம்பிக்கை வரவில்லை. மாறாக, அவர் தனது விசுவாசத்தைக் காத்துக்கொண்டதை (வ.7) அறிந்திருந்தார். இந்த அப்போஸ்தலன், இயேசுவுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். இன்பதுன்பங்களின் மத்தியிலும் தம்மை அழிவினின்று மீட்டவரைப் பின்பற்றினார். தனது உண்மையுள்ள வாழ்வைக் கௌரவப்படுத்தும் விதமாக, "நீதியின் கிரீடத்தோடு" (வ.8) இயேசு ஆயத்தமாய் நின்றுகொண்டிருப்பதை அறிந்திருந்தார்.

பவுல், இந்த கிரீடம் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்று சொல்லாமல் , "அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்." (வ.8) என்று வலியுறுத்துகிறார். ஒரு புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கும் நாமும்கூட, தம்மை நேசிக்கும் அனைவருக்கும் கிரீடமளிக்க ஆவலாய் இயேசு நிற்பதை நினைவில்கொள்வோம். சிறப்பாக ஓட்டத்தை முடிக்க வாழ்வோம்.

அமளியினூடே கிருபை

நான் எதிர்பாராதவிதமாக ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். அறைகள் அதிர்வது போல, கீழறையில் என் மகன் கிட்டாரைச் சத்தமாக வாசித்தான். அமைதியில்லை, சமாதானமில்லை, தூக்கம் போனது. சிலநிமிடங்களில் எனது மகள் "வியத்தகு கிருபை" என்ற பாடலை தனது பியானோவில் வாசிக்க, இனிமையான இசை என் காதுகளை வருடியது.

பொதுவாக எனது மகன் கிட்டாரை வாசிக்கையில், எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த நொடியில், எனக்கு எரிச்சலூட்டி அமைதியைக் குலைத்தது. இருப்பினும் உடனே ஜான் நியூட்டனின் பாடல் வரிகள், அமளியின் மத்தியில் மேற்கொள்ளும் கிருபையை எனக்கு ஞாபகப்படுத்தியது. நமது வாழ்வின் புயல்கள் எவ்வளவாய் இரைந்தாலும், தேவையற்றதாக நம்மைத் திசைதிருப்பினாலும்; கிருபையைக் குறித்த தேவனின் குறிப்புகள் உண்மையாயும் தெளிவாயும் உள்ளன. எப்போதும் நம்மீதிருக்கும் அவருடைய கவனமான கரிசனையை நினைப்பூட்டுகின்றன.

இந்த உண்மையை நாம் வேதத்தில் பார்க்கிறோம். சங்கீதம் 107:23–32 இல், கப்பலோட்டிகள் தங்களை எளிதாய் அழிக்கக்கூடிய பெரும்புயலை எதிர்த்து கடுமையாய் போராடுகின்றனர். "அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது." (வ.26). ஆயினும் நம்பிக்கையிழக்காமல், "கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்." (வ. 28). இறுதியாக, "அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்." (வ. 30) என்று வாசிக்கிறோம்.

அமளியின் நேரங்களில், இரைச்சலும் பயமும் அணைகளைத்தாண்டி, நமது ஆத்துமாக்களில் புயலுண்டாக்கலாம். ஆனால், நாம் தேவனை நம்பி அவரிடம் ஜெபிக்கையில் தேவைகளைச் சந்திக்கும் அவரது கிருபையின் பிரசன்னத்தை நாம் அனுபவிப்போம். அவரது நிலையான அன்பென்னும் புகலிடம் அடைவோம்.

நான் நானாகவே

அந்த வாலிப பெண்ணால் தூங்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளியான அவள், மறுநாள் தன் சபையின் மூலமாக தன் உயர்கல்விக்கான உதவித்தொகையைப் பெறவிருந்தாள். 'ஆனால், இதற்கு நான் தகுதியற்றவள்' என்று சார்லோட் எளியோட் எண்ணினாள். தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வின் அம்சங்களைக் குறித்துச் சந்தேகப்பட்டவள், தன்னுடைய தகுதியில் திருப்தியடையாமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள். மறுநாளும் மன அமைதியின்றி, இறுதியாகத் தனது மேஜைக்கு நகர்ந்து பேனாவையெடுத்து, காகிதத்தில் "நான் பாவிதான்" என்ற அரும்பெரும் பாடலின் வரிகளை எழுதினாள்.

"நான் பாவிதான், ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்; வா என்று என்னை அழைத்தீர். என் மீட்பரே, வந்தேன்"

1835 இல் எழுதப்பட்ட இந்த பாடலின் வரிகள், இயேசு எவ்வாறு தன்னுடைய சீஷர்களை தெரிந்துகொண்டு தமக்கு ஊழியம் செய்ய வைத்தார் என்பதை விவரிக்கின்றன. அவர்கள் ஆயத்தமாய் இருந்ததாலல்ல. அவர்கள் அப்படி இருக்கவுமில்லை. அவர்கள் இருந்தவண்ணமாகவே அவர்களுக்கு அவர் அதிகாரம் அளித்ததால்தான். தகுதியற்றவர்களாலான கூட்டம், பன்னிரெண்டு பேரிருந்த குழுவில்; வரி வசூலிப்பவன், அதிகப்பிரசங்கி, கட்டுக்கடங்காத இரு சகோதரர்கள் (பார்க்கவும். மாற்கு 10:35–37), மேலும் அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து (மத்தேயு 10:4) உள்ளிட்டோர் இருந்தனர். ஆயினும், அவர் அவர்களுக்கு "வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்க, குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ண, மரித்தோரை எழுப்ப, பிசாசுகளைத் துரத்த;" (வ. 8) அதிகாரம் கொடுத்தார். மேலும் இவற்றைச்  செய்கையில் பணம் பெற வேண்டாமென்றும்;  பயணசுமைகள், மாற்று வஸ்திரங்கள் மற்றும் பாதரட்சைகள், வழித்தடிகள் ஆகியவற்றை தவிர்க்கவும் சொன்னார் (வ. 9–10).

"நான் உங்களை அனுப்புகிறேன்" (வ.16) என்றவரே போதுமானவராயிருந்தார். இன்றைக்கும் அவருக்குச் செவிகொடுப்போருக்கு, அவர் போதுமானவர்.

நம் அனைத்து காரியங்களிலும்

1954 இல், மார்ட்டின் லூத்தர் "வியாபாரிகளுக்கிடையே பொதுவான ஒரு விதிமுறை உண்டு, 'மற்றவர்களைக் குறித்து எனக்கு எந்த கரிசனையும் கிடையாது. எனது லாபமும் எனது பேராசையும் நிறைவேறினபின்புதான் மற்ற எல்லாமே'. இது அவர்களுடைய பிரதானமான சட்டமாயுள்ளது" என்றார். இதற்கு இருநூறாண்டுகள் கழிந்து, நியூ ஜெர்சி மாகாணத்தின் மவுண்ட் ஹாலி பகுதியைச் சேர்ந்த ஜான் வுல்மேன் என்பவர் இயேசுவின் மீதிருந்த பற்றுதலை தனது தையற்கடை தொழிலில் வெளிக்காட்டினார். அடிமைகளின் விடுதலைக்கு ஆதரவளிக்கும் விதத்தில், கட்டாய வேலைவாங்குதலில் ஈடுபட்ட நிறுவனங்களின் பஞ்சு மற்றும் சாயப் பொருட்களை வாங்க மறுத்துவிட்டார். சுத்த மனசாட்சியோடு அவர் தனக்கடுத்தவரையும் நேசித்து, தனது காரியங்களில் உத்தமத்தையும் உண்மையையும் காத்து வாழ்ந்தார்.

அப்போஸ்தலன் பவுலும், "கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே" (2 கொரிந்தியர் 1:12) வாழ பிரயாசப்பட்டார். கொரிந்து பட்டணத்தில் ஒருவன், இயேசுவின் அப்போஸ்தலன் என்கிற தன்னுடைய அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டபோது, அவர்கள் மத்தியில் தான் நடந்துகொண்ட விதத்தைத் தற்காத்தார். தன்னுடைய வார்த்தைகளும் எழுத்துக்களும், நுட்பமான பரிசோதனையைக்கூட எதிர்கொள்ளக்கூடியவை என்றெழுதினார் (வ.13). தன்னையல்ல, தன்னுடைய செயல்திறனுக்குத் தேவனின் கிருபையையும் வல்லமையையும் தான் சார்ந்துகொண்டிருப்பதை வெளிக்காட்டினார் (வ.12). சுருங்கச் சொன்னால், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமே பவுலின் அனைத்து காரியங்களிலும் பரவியிருந்தது.

கிறிஸ்துவின் தூதுவர்களான நாமும் தொழில், குடும்பம் என்று நமது அனைத்து காரியங்களிலும் நற்செய்தியை ஒலிக்கச்செய்வதில் கவனமாயிருப்போம். தேவனின் கிருபையாலும் வல்லமையாலும் அவருடைய அன்பைப் பிறருக்கு நாம் வெளிக்காட்டுகையில், நாம் தேவனைக் கனப்படுத்துகிறோம்; பிறரையும் நேசிக்கிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நம்மைக் காத்துக்கொள்ள முயற்சித்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரம் “பாதுகாப்பாக இருங்கள், ஸ்டே புட்” என்ற விளம்பரப் பிரச்சாரம், மின்தூக்கியில் சிக்கிக்கொள்பவர்களின் அறிவூட்டலுக்காக ஏறெடுக்கப்பட்டது. அவ்வாறு சிக்கிக்கொண்ட பயணிகள் பயத்தில் மின்தூக்கியின் கதவை திறக்கமுயன்றபோதும், வேறு வழிகளில் வெளியேற முயன்றபோதும் உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உதவிக்கு அழைப்பதற்கும், அவசரகால பதிலளிப்பவர்கள் வரும் வரை காத்திருப்பதற்கும் அலாரம் பொத்தானைப் பயன்படுத்துவதே அத்தருணத்தில் சிறந்த செயல்திட்டமாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் வித்தியாசமான மீட்புத் திட்டத்தை விவரித்தார். பாவத்தினால் பின்னாக இழுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அமைந்தது. அவர் எபேசியர்களுக்கு “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபேசியர் 2:1) என்று அவர்களுடைய முழுமையான ஆவிக்குரிய உதவியற்ற தன்மையை பவுல் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். அவர்களும் பிசாசுக்கு கீழ்படிந்து அந்த வலையிலே சிக்கியிருந்தனர் (வச. 2). இதன் விளைவாக அவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகினர். ஆனால் அவர் அவர்களை ஆவிக்குரிய இருளில் சிக்கவைக்கவில்லை. அந்தகார இருளில் இருந்த  நீங்கள் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (வச. 5,8) என்று பவுல் எழுதுகிறார். தேவனுடைய மீட்பு நம்முடைய விசுவாசத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. விசுவாசம் என்றால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது என்று தேவனிடத்தில் உதவிகோருவது என்ற அர்த்தம். 

தேவனுடைய கிருபையால், பாவத்தின் வலையில் இருந்து மீட்கப்படுவது நம்மிடம் இருந்து உருவானது அல்ல. இது இயேசுவின் மூலமாக நமக்கருளப்பட்ட “தேவனுடைய ஈவு” (வச. 8). 

 

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2). 

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம். 

 

பார்ப்பதற்கு கண்கள்

பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளால் போராடி வந்த தன் உறவினர் சாண்டிக்காக ஜாய் கவலைப்பட்டாள். அவள் சாண்டியின் அபார்ட்மெண்டிற்குச் சென்றபோது, கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அது காலியாகத் தெரிந்தது. அவளும் மற்றவர்களும் சாண்டியைத் தேடத் திட்டமிட்டபோது, “தேவனே, நான் பார்க்காததைக் காண எனக்கு உதவுங்கள்” என்று ஜாய் ஜெபித்தாள். அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போது, ஜாய் சாண்டியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்த திரைச்சீலை அசைந்ததை அவள் பார்க்க நேரிட்டது. அந்த நேரத்தில், சாண்டி உயிருடன் இருப்பதை அவள் அறிந்தாள். அவளை அடைய அவசர உதவி தேவைப்பட்டாலும், இவ்விதமான ஜெபத்தை ஏறெடுத்ததற்காய் ஜாய் மகிழ்ச்சியடைந்தாள்.

எலிசா தீர்க்கதரிசி, தேவன் தன்னுடைய பராக்கிரமத்தை அவருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கும்பொருட்டு விண்ணப்பிக்கிறார். சீரிய இராணுவம் அவர்களுடைய பட்டணத்தைச் சுற்றி வளைத்தபோது, எலிசாவின் வேலைக்காரன் பயத்தில் நடுங்கினான். இருப்பினும், அவன் தேவனுடைய மனுஷனாய் இல்லாதபோதிலும், தேவனுடைய உதவியினால் காணக்கூடாததை அவன் கண்டான். எலிசா தன்னுடைய வேலைக்காரன் காணவேண்டும் என்று ஜெபிக்க, “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இராஜாக்கள் 6:17).

எலிசாவுக்கும் அவனுடைய வேலைக்காரனுக்கும், ஆவிக்குரிய மற்றும் மாம்ச வாழ்க்கைக்கு இடையே இருந்த திரையை தேவன் விலக்கிவிட்டார். திரைச்சீலையின் சிறிய மின்னலைக் காண தேவன் ஜாய்க்கு கிருபையளித்தார் என்று அவளும் நம்புகிறாள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆவிக்குரிய தரிசனத்தைக் கொடுக்கும்படி நாமும் அவரிடம் விண்ணப்பிக்கலாம். நம் அன்புக்குரியவர்களுடனோ அல்லது நமது சமூகங்களிலோ, நாமும் அவருடைய அன்பு, உண்மை மற்றும் இரக்கத்தின் பிரதிநிதிகளாக திகழமுடியும்.